Monday, October 17, 2011

வேலாயுதம் பற்றி ஜெயம் ராஜா

‘‘எனக்கு எல்லாருடைய படங்களும் பிடிக்கும். ‘மங்காத்தா’வாகட்டும், ‘அங்காடித் தெரு’வாகட்டும் முதல் நாள் முதல் ஷோ பாத்துடுவேன். அதேபோல என் படங்களும் எல்லாத் தரப்பினருக்கும் பிடிக்கணும்னு நினைப்பேன். அதுக்கான உழைப்பு என் எல்லாப்படங்கள்லயும் இருக்கும். அதுல உச்சம் இந்தப்படம்...’’ என்கிறார் ஆஸ்கர் பிலிம்ஸின் ‘வேலாயுதம்’ இயக்குநர் எம்.ராஜா.

‘‘அதிலயும் இதுல விஜய் ஹீரோவாகிட்டதால, அவருக்கேத்த ஹீரோயின்கள், அ...வருக்கேத்த வில்லன்கள், அவங்க தாங்கற அளவுக்குப் பிரச்னைகள், அதுக்கான பேக்ட்ராப்கள்னு படம் பெரிசா போய்க்கிட்டேயிருந்தது. அது அத்தனைக்கும் ஈடு கொடுத்து ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தா இந்தப் படத்தைக் கொடுக்கிறோம். அதுலயும் செம விருந்தா இருக்கும் ‘வேலாயுதம்’...’’ என்ற ராஜா, கடைசியாக காஷ்மீர் சென்று படத்துக்கான பாடலைப் படம்பிடித்து வந்த அனுபவத்தைச் சொன்னார்.

‘‘காஷ்மீர்ல ஸ்ரீநகர் தாண்டி 200 கிலோமீட்டர்ல இருக்கிற அற்புதமான டூரிஸ்ட் ஸ்பாட் ‘பகல்காம்’. எந்த சீசன்லயும் போகமுடியும்ங்கிறது அந்த இடத்தோட சிறப்பு. ஆனா என்ன ஒண்ணு, அங்கே போக மோட்டார் வாகனங்களால முடியாது. முழுக்க குதிரை சவாரிதான். நாங்க தங்கியிருந்த ஹோட்டல் வாசல்ல கார்கள் போல ஆயிரக்கணக்கில குதிரைகள் சவாரிக்காகக் காத்திருந்ததைப் பார்த்து அசந்து போனோம். விஜய், ஹன்சிகா, ஜெனிலியான்னு நாங்க எல்லாருமே குதிரைல போனது மறக்க முடியாத அனுபவம். அதேபோல காஷ்மீர் கலவர பூமியானதால, ராணுவத்தினர் காவல்ல படம் பிடிச்சதும் த்ரில்லான அனுபவம்.

‘முளைச்சு மூணு இலை விடல...’ங்கிற விவேகா எழுதிய பாடலை அங்கே எடுத்தோம். அந்தப் பாடலோட சிறப்பு... அதுல விஜய், ஹன்சிகா, ஜெனிலியா மூணு பேருமே நடிக்கிறதுதான். ஆனா ஒரு ஹீரோயினோட டூயட் பாடறது இன்னொரு ஹீரோயினுக்குத் தெரியாது. அதை சரியா மேட்ச் பண்ணி அழகா கம்போஸ் பண்ணியிருந்தார் ஷோபி மாஸ்டர். படத்தில வரிசைப்படி நான்காவதா வர்ற இந்தப்பாடல், விஜய்யோட மெலடிகள்லயே அலாதியா அமைஞ்சிருக்கு. பரபரன்னு ஃபாஸ்ட்டா ஆடற விஜய்க்கு இத்தனை மெலடி சாத்தியமான்னுதான் முதல்ல இந்தப்பாடலைக் கேட்கும்போது தோணும். ஆனா சாத்தியப்பட்டுதுங்கிறதுதான் உண்மை. 7&8 ரிதம்னு சொல்லக்கூடிய அற்புதமான மெலடியில விஜய் ஆன்டனி இசைச்சிருக்க இந்தப்பாடல்தான் என்னோட ரேட்டிங்படியே நம்பர் ஒன். விஜய் ஆன்டனியோட மெலடி வரிசைலயும் இந்தப்பாடல் இன்னைக்கு இடம் பிடிச்சிருக்கு..!’’

விஜய் பற்றிப் பேசும்போது சில டெசிபல்கள் சப்தம் கூடியது மென்மையாகப் பேசும் ராஜாவின் பேச்சில்...

‘‘இதுவரை தமிழ்ல வராத கதை இதுங்கிறது போலவே, விஜய் இதுவரை ஏற்காத கேரக்டரை இதுல ஏற்றிருக்கார். அவர் தகுதிக்கு எவ்வளவு இறங்கி நடிக்க முடியுமோ அவ்வளவு இறங்கி நடிச்சிருக்கிறதோட, இதுவரை இத்தனை ஏறி நடிச்சதில்லைங்கிற அளவில ஏறியும் சூப்பர் ஹீரோவாகியிருக்கார். இதுவரை சூப்பர் ஹீரோவான நடிகர்கள் கூட ஃபேன்டஸியாதான் அப்படி ஆகியிருக்காங்க. ஆனா இவர்தான் முதல்முதலா லாஜிக்கா சமுதாயத்துக்காக சூப்பர் ஹீரோவா ஆகியிருக்கார். இந்தப்படத்தோட ஸ்பெஷாலிட்டியே ஹீரோவைப் போல, ஹீரோயின்கள் போல, வில்லன்களைப்போல மக்களும் இதுல கேரக்டர்களா வர்றதுதான்.

சில வசனங்கள் ஹீரோக்களுக்குப் பேர் கொடுக்கும். சில வசனங்கள் ஹீரோக்களால புகழடையும். இதுல அப்படி ஒரு வசனம்... விஜய் பேசற ‘உழைக்கிறவன் வியர்வை தாய்ப்பாலைவிட உயர்வானது...’ இது டிரெய்லர்ல வெளியான நாளிலிருந்தே மத்த டைரக்டர்கள் என்னைக் கூப்பிட்டுப் பாராட்டற அளவுக்கு பவர்ஃபுல்லா அமைஞ்சிடுச்சு. ‘நான் சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவேன். இதுல நீ வேற காட்டு காட்டுன்னு சொல்றே... காட்டாம இருந்தா நல்லா இருக்குமாங்ணா..?’ன்னு அவர் பேசற இன்னொரு வசனம் தியேட்டர்கள்ல பட்டையைக் கிளப்பும்னு நம்பலாம்.

இதுல எந்த அளவுக்கு விஜய் இன்வால்வ் ஆகியிருந்தார்னா, பால்காரரா வர்ற அவருக்கு ஒரு சண்டை இருக்கு. அதுல இறங்கி அடிக்கணும்ங்கிறதால சட்டை போடாத வெற்று உடம்போட அவர் அதை செய்தா நல்லா இருக்கும்னு நினைச்சேன். அதுக்காக ஒருமாசம் பிரேக் விட்டு அவரை உடம்பை ஏத்தச் சொல்லலாம்னு நானே முடிவு கட்டி அவர்கிட்ட விஷயத்தைச் சொன்னேன். அவர் உடனே சட்டையைக் கழற்றி, ‘இந்த அளவுக்கு இருந்தா போது மா..?’ன்னு கேட்டப்ப என் கண்களையே நம்ப முடியலை. அத்தனை கட்டுமஸ்தா ஏத்தி வச்சு அந்த ஃபைட்டுக்காகக் காத்திருந்தார். அவர் மேல சட்டை போட்டிருக்கும்போது அந்த உடம்பு தெரியலை. சட்டையைக் கழற்றினா கும்முன்னு தெரியறார். பேர் பாடியோட ஃபைட் யோசிச்சது நல்லதா போச்சு. இல்லாட்டி அந்த ஸ்பெஷல் விஷயத்தை ரசிகர்கள் மிஸ் பண்ணியிருப்பாங்கன்னு நினைச்சுக்கிட்டேன். படத்துக்கே ஹைலைட்டா ஆகியிருக்கு அந்த ஃபைட்.

இந்தப் படத்துக்குப் பிறகு ஸ்டன்ட் மாஸ்டர் செல்வா பெரிய இடத்துக்குப் போவார். ப்ரியனோட ஒளிப்பதிவும், வி.டி.விஜயனோட எடிட்டிங்கும் எனக்குத் தோள் கொடுத்திருக்குன்னா, புரட்யூசர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் என் கனவுகளை நிஜமாக்க உதவியிருக்கார். அதோட ரிசல்ட், சென்சார்ல படத்தைப் பார்த்தவங்க பாராட்டி சர்டிபிகேட் கொடுத்திருக்கிறதுதான். மக்கள் சர்டிபிகேட்டும் இதுக்குக் குறைவிருக்காதுன்னு நான் எதிர்பார்க்கிறது போலவே ரசிகர்களும் இந்தப் படத்தை தீபாவளி ட்ரீட்டா எதிர்பார்க்கலாம்..!

No comments:

Post a Comment